தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
மேலும், ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி’, ‘ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே?’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ என்று தவெக ஆட்சிக்கு வந்ததை விமர்சித்தும், ‘கதறல் கேட்கவில்லையா சிஎம்?’ என்று தமிழகத்தில் நிகழும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கேட்பதுபோலவும் பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்களையும் அணிந்திருந்தனர்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படாததை சுட்டிக்காட்டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேரவையில் வாசிக்காமல் வெளியேறினார். அதன்பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே பேரவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்தார்.
இந்நிலையில், தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. முன்னதாக, ஆளுநர் அர்லேகரை சமீபத்தில் சந்தித்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், பேரவையில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார்.
காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதேபோல்,எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி அரசுக்கு என்ன மாதிரியான சவாலை விடுக்கவிருக்கிறார். முதல்வர் விஜய் எப்படி அவற்றை சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பலமாக உருவாகியுள்ளது.
இந்தச் சூழலில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
கடந்த ஆட்சியில் அதிமுகவினர், சென்னை அண்ணா பல்கலைக்கழ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ‘யார் அந்த சார்?’ என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தது நினைவுகூரத்தக்கது.















