முதல்வர் விஜய்யுடன் எச்டி ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு – தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டுமான திட்டம்

0
19

 தூத்துக்குடியில் ரூ.38ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன், எச்டி கேஎஸ்ஓஇ நிறுவன அலுவலர்கள் சந்தித்தனர்.

தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் எச்டி ஹுண்டாய். இந்நிறுவனம் தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய கப்பல் கட்டுமானத் தள திட்டத்தின் செயல்பாட்டு நிலைகள் குறித்து, இந்நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் நேற்று முதல்வர் விஜய்யை தலைமைச்செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவில் புதிதாக உருவாகவுள்ள இந்தக் கப்பல் கட்டுமானத் திட்டத்தில் ரூ.38,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம், 15 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும், துணைத் தொழில்கள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி மூலம் மாநிலத்தில், மேலும் பல வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இத்திட்டத்துக்காக, சிப்காட் மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் ஆகியவை இடையில் தமிழ்நாடு தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் கனரக தொழிற்சாலைகள் பூங்கா (NSHIPTN) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இக்கப்பல் கட்டுமானத் தொகுதியை நிறுவ முதல் கொள்கை அளவிலான ஒப்புதலை, இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது. முதல்வருடனான சந்திப்பின் போது, இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், தூத்துக்குடியில் இத்திட்டத்தை செயல்படுத்து வதில் நிறுவனத்தின் உறுதியான ஆர்வத்தையும் தெரிவித்தனர். அப்போது முதல்வர் விஜய், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் தூத்துக்குடியில் விரைவாக செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும், திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான நிர்வாக ஆதரவும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எச்டி ஹுண்டாய் நிறுவனத்தினர் கப்பல் கட்டும் தளத்தை விரைவில் தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் ச.கீர்த்தனா, தலைமைச்செயலர் மு.சாய்குமார், தொழில்துறை செயலர் ச. விஜயகுமார், டிட்கோ தலைவர் தா.கார்த்திகேயன், சிப்காட் மேலாண்மை இயக்குநர் சி.அ. இராமன், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாழ்த்து:

மேலும், தலைமைச்செயலகத்தில், அமைச்சர் கீர்த்தனா, தொழில்துறை செயலர் விஜயகுமார், டிட்கோ தலைவர் கார்த்திகேயன் ஆகியோர், முதல்வர் விஜய்யை சந்தித்து, தமிழக அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN- SPACe) இணைந்து தூத்துக்குடி மாவட்டம் அல்லிகுளத்தில் உருவாக்கப்பட உள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் ‘ விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் ’ அமைக்க கடந்த ஜூன் 11ம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here