ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 9 ரன்களில் வெற்றி பெற்றது எல்எஸ்ஜி. மழை குறுக்கீடு காரணமாக இந்த ஆட்டம் 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 50-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த எல்எஸ்ஜி அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்காக மிட்செல் மார்ஷ், 56 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். நிக்கோலஸ் பூரன் 38, ரிஷப் பந்த் 32 ரன்கள் எடுத்தனர். மழை காரணமாக இந்த ஆட்டம், 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. ஆர்சிபி அணியின் பந்து வீச்சாளர்களில் ஹேசில்வுட், ரஷிக் சலாம், சுயாஸ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் ஓவருக்கு 10+ ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தனர்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. ஜேக்கப் பெத்தேல் 4, விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆர்சிபி. அப்போது ஜோடி சேர்ந்த படிக்கல் மற்றும் பட்டிதார் இணைந்து 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். படிக்கல் 34, ஜிதேஷ் 1 மற்றும் பட்டிதார் 61 ரன்களில் வெளியேறினர்.
அப்போது களம் கண்ட டிம் டேவிட், 17 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை திக்வேஷ் சிங் ராதி வீசினார். கடைசி 2 பந்துகளில் ஆர்சிபி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அதில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து எல்எஸ்ஜி அணியை வெற்றி பெற செய்தார் திக்வேஷ். இதன் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது எல்எஸ்ஜி அணி. அந்த அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.















