உ.பி.யில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

0
317

உத்தர பிரதேச மாநிலம் புலந்த் சாஹரில் உள்ள சிக்கந்தராபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், 9 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஷாபுரி காலனியைச் சேர்ந்தவர் முகமது ரியாசுதீன் (50). இவரது மனைவி ருக்சானாவுக்கு (45) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் அந்த ஆக்சிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதையடுத்து, அந்த இரண்டு மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

இந்த சம்பவத்தில், ரியாசுதீன், ருக்சானா, இவர்களது இரண்டு மகன்கள் ஆஸ் முகமது (26), சல்மான் (16), மகள் தமன்னா மற்றும் அவரது 3 வயது மகள் ஹிப்ஸா ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், தமன்னா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ரியாசுதீனின் மற்ற இரு மகன்கள் ஷாருக் (26), சிராஜ் (30) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

9 மாத கர்ப்பிணி: தமன்னாவின் கணவர் முகமது ரிஸ்வான் தாத்ரி பகுதியில் வசித்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “தமன்னா 9 மாத கர்ப்பிணி. நோய்வாய்ப்பட்ட தனது தாயாரை பார்ப்பதற்காக குழந்தையுடன் சென்றார். செவ்வாய்க்கிழமை வீடு திரும்ப இருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், எனது மனைவி, மகள் மட்டுமின்றி வயிற்றில் இருந்த சிசுவும் இறந்த சோகத்தை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. இதை, எனது 5 வயது மகனுக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன்’’ என வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து அப்பகுதியைச் சேரந்த முகமது அட்னன் கூறுகையில் ‘‘ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. 500 மீட்டர் வரை அதன் அதிர்வு உணரப்பட்டது. வீடு இடிந்து விழுந்ததில் பலர்அதில் சிக்கிக்கொண்டு காப்பாற்றுமாறு கதறினர். போலீஸ் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி அவர்களை மீட்டனர். உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது” என்றார்.

இந்த விபத்துக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உரிய மருத்துவ உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here