ஜே.பி.நட்டா உட்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்

0
590

15 மாநிலங்களில் ஏப்ரல் 2-ம் தேதியுடன் காலியாகவிருக்கும் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கோத்ரா பகுதி மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் பார்மர், பிரபல வைர வியாபாரி கோவிந்த் தோலக்கியா, மாநில பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் மாயங்க் நாயக் ஆகிய நால்வரும் நேற்று காந்திநகரில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக ஜே.பி.நட்டா உள்ளிட்ட 4 வேட்பாளர்களும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோருடன் மாநில சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தனர். பாஜக வேட்பாளர்களிடம் இருந்து தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தா வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார்.

மாநிலங்களவை தேர்தலில் குஜராத்தில் இருந்து சுயேச்சையாக போட்டியிட பரேஷ் முலானி என்பவர் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். எனினும் இவரது மனுவை எம்எல்ஏ எவரும் முன்மொழியாததால் அவரது மனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்படும் என ரீட்டா மேத்தா கூறினார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். இந்நிலையில் குஜராத்தில் வேறு எந்த கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தாததால் இந்த நால்வரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here