3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்: நீதிமன்றத்தை புறக்கணித்தனர்

0
222

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்றுநீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்திய தண்டனை சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக் ஷிய‌ அதிநியம் என்ற பெயர்களில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆவின் நுழைவாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக வழக்கறிஞர்கள் ஆஜர்: இதேபோல், மெட்ராஸ் பார் அசோசியேஷன், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் லா அசோசியேஷன் சார்பிலும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆதரித்து பாஜக வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த எஸ்.திவாகர், ஏ.மோகன்தாஸ். ஜி.எஸ்.மணி, டி.ராஜா, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர்புறக்கணிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆஜராகினர்.