போர் விமானத்திலிருந்து காணாமல் போன அமெரிக்க விமானியை ஈரானுக்குள் புகுந்து மீட்டோம்: ட்ரம்ப்

0
107

அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின் எப் -35 மற்​றும் எப்- 15 இ ரக போர் விமானங்​களை நேற்று முன் தினம் சுட்டு வீழ்த்​தப்பட்டன. இதில் ஒரு விமானி பத்திரமாக திரும்பிய நிலையில், மற்றொரு விமானி காணாமல் போனார்.

இந்த சூழலில் அவரை ஈரானும், அமெரிக்காவும் தீவிரமாக தேடியது. அந்த விமானியை உயிருடன் பிடிப்பவருக்கு 60,000 டாலர் வெகுமதி வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது. இதனையடுத்து, ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தின் விமானி மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பாக ஈரானை விட்டு வெளியேறிவிட்டார் என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “நாங்கள் அவரைக் கண்டுபிடித்துவிட்டோம். என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணிநேரங்களில், அமெரிக்க ராணுவம், நமது அமெரிக்க அதிகாரி ஒருவருக்காக, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அவர் மிகவும் மதிக்கப்படும் ஒரு கர்னலாகவும் இருக்கிறார்.

பென்டகன் அந்த அதிகாரியை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது. அவரை மீட்பதற்காக விடாமுயற்சியுடன் திட்டமிட்டு வந்தது. அவரை மீட்க, உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட பல விமானங்களை நம் ராணுவம் அனுப்பியது. அந்த விமானி, ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் பதுங்கி இருந்தார். தொடர்ந்து அவர் நமது எதிரிகளால் தேடப்பட்டுக் கொண்டிருந்தார்.

அமெரிக்கப் படைகளின் மீட்பு முயற்சியின்போது கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குப் பின் அவர் மீட்கப்பட்டார். ஈரானிய வான்வெளியில் நாம் மிகப்பெரிய வான் ஆதிக்கத்தை அடைந்துவிட்டோம் என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்த மீட்புப் பணியில் எந்த அமெரிக்கரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை” என்று அவர் குறிப்பிட்டார். இந்த மீட்பு நடவடிக்கை குறித்து ஈரான் இன்னும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here