பல்கலைக்கழக துணைவேந்தர்களை போலீஸார் மிரட்டியதால்தான், அவர்கள் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் நேற்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கிவைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
தமிழகத்தில் கல்வித்தரம் கவலை அளிக்கிறது. மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. ஆண்டுக்கு 6,500 பேர் முனைவர் பட்டம் பெற்றாலும், ஒரு சதவீதத்தினர்கூட ஜேஇஇ, நெட் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில்லை.
இவர்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் சம்பளத்துக்கு பணிபுரிகின்றனர். அரசுத் துறைகளில் ஏதாவது ஒரு பணியில் சேருவதே இவர்களுக்கு இலக்காக இருக்கிறது. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய தமிழக பல்கலைக்கழகங்களின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.
மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. ஒருவர் ஊட்டி வந்தார். ஆனால், அவரும் பங்கேற்கவில்லை. துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டனர். போலீஸார் துணைவேந்தர்களின் வீடுகளுக்கே சென்று மிரட்டியுள்ளனர். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசும்போது, “ஆளுநர் இந்திய இறையாண்மையைப் பாதுகாத்து வருகிறார். இந்த மாநாட்டில் மாநில துணைவேந்தர்கள் பங்கேற்வில்லை என்று கவலைப்பட வேண்டாம். அவர்களின் சூழ்நிலை காரணமாக பங்கேற்கவில்லை. பங்கேற்றவர்களுக்கு இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றுங்கள்’ என்றார்.
முதல்வர் அச்சப்படுகிறாரா? – ஆளுநர் ஆர்.என்.ரவி சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறையைப் பயன்படுத்தி மாநாட்டில் துணைவேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்தது, அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. மாநில உயர்கல்வி அமைச்சர், துணைவேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின் காவல் துறையைப் பயன்படுத்தியுள்ளார். மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
ஊட்டியில் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளின் அறைக் கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல் துறையால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல் துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகமாகும். இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது?
கல்வி மாநாட்டில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு சுதந்திரம் இல்லையா? ஆதிதிராவிடர் மற்றும் ஏழை மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவால், மாணவர்களின் தரம் உயர்ந்துவிடும், இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா? இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.
காவல் அலுவலகத்தில் ஆஜர்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு வழக்கு தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதன் நேற்று சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி, விளக்கம் அளித்தார். ஆளுநர் தலைமையில் ஊட்டியில் நேற்று துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காவல் துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
வானதி சீனிவாசன்… சட்டப்பேரவைக்கு வெளியே வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “ஆளுநர் கூட்டியிருக்கும் கூட்டத்துக்கு துணைவேந்தர்களை செல்லக்கூடாது என மிரட்டுவது, அவர்களை தடுப்பது போன்ற செயல்களில் அரசு ஈடுபடுவது தமிழகத்துக்கு அவமானகரமானது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு தக்க பதில் அளிக்க வேண்டும்” என்றார்.