ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன்கள் இலக்கை விரட்டிய நடப்பு சாம்பியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 37, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 17, ஆந்த்ரே ரஸ்ஸல் 17 ரன்கள் சேர்த்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும், மார்கோ யான்சன் 3.1 ஓவர்களை வீசி 17 ரன்களை வழங்கி 3 விக்கெட்களையும் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
நடப்பு தொடரில் கொல்கத்தா அணி 4-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்வி, 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியதாவது:
முலான்பூர் ஆடுகளம் தட்டையானது இல்லை. பந்து வீச்சாளர்களுக்கு ஏதோ இருந்தது. அதை நாங்கள் சமாளிக்க வேண்டியது இருந்தது. சில நேரங்களில் டி20 போட்டிகளில் மெய்டன் ஓவர் ஆட வேண்டியிருந்தாலும் பரவாயில்லை அல்லது 70 முதல் 80 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினாலும் பரவாயில்லை. அது சிறப்பானதுதான். ஒரு பேட்டிங் குழுவாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய வேண்டும். டி20 என்பது சிக்ஸர்கள் அடிப்பது மட்டுமல்ல.
இப்போது, பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்களுக்குச் செல்வதை நாங்கள் காண்கிறோம், அவர்கள் களத்தில் நன்றாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்வதும், ஒரு பேட்ஸ்மேனாக விளையாட்டு விழிப்புணர்வைக் கொண்டிருப்பதும் அதன் பின்னர் விளையாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதும் முக்கியம். அதில்தான் நாங்கள் தேக்கம் அடைந்துவிட்டோம்.
ஒரு கேப்டனாக தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில், அனைத்து வீரர்களும், குறிப்பாக பேட்ஸ்மேன்கள், தங்கள் சொந்த ஆட்டத்தைப் பற்றி சிந்தித்து வரும் போட்டிகளில் மேம்படுவார்கள் என்று நம்புகிறேன்.
தொடரில் பாதி முடிந்துவிட்டது, 7 ஆட்டங்களை விளையாடிவிட்டோம். இன்னும் 7 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வந்து விளையாட வேண்டும். சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் நாங்கள் மனநிறைவு அல்லது அதிக நம்பிக்கையுடன் இருந்தோம் என்று சொல்ல மாட்டேன். இது பேட்டிங் குழுவின் ஒட்டுமொத்த தோல்வி. விதிவிலக்காக பஞ்சாப் அணி சிறப்பாக பந்து வீசியது. இறுதிப் பகுதியில் 3-4 விக்கெட்டுகளை இழந்தபோது, அதிக நேரம் எடுத்துக்கொண்டு ஒன்றொன்றாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் அது முக்கியமானது. இவ்வாறு ரஹானே கூறினார்.