மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியிருப்பது நம்பிக்கையின் ஒளிக்கீற்று என்று குகி பழங்குடியினர் கூறியுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மைதேயி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் குகி பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே கடந்த 2023-ல் ஏற்பட்ட இனக் கலவரத்துக்கு பிறகு அங்கு இன்னும் இயல்நிலை திரும்பாத சூழலில் முதல்வர் பிரேன் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். இதையடுத்து மணிப்பூரில் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பூர்வீக பழங்குடியினத் தலைவர்கள் மன்றத்தின் (ஐடிஎல்எப்) கின்சா உல்சோங் கூறுகையில், “முதல்வர் மாற்றத்தை விட குடியரசுத் தலைவர் ஆட்சி விரும்பத்தக்கது. இது நம்பிக்கையின் ஒளிக்கீற்று. குகி-சோ பழங்குடிகள் இனி மைதேயி தலைவர்களை நம்ப மாட்டார்கள். எனவே புதிய மைதேயி முதல்வரை தேர்வு செய்வது எங்களுக்கு ஆறுதலாக இருக்காது. மணிப்பூரில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர குடியரசுத் தலைவர் ஆட்சி அடித்தளம் அமைக்கும் என நம்புகிறோம். மேலும் அரசியல் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் என கருதுகிறோம்” என்றார்.
இதற்கு மாறாக குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மைதேயி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மைதேயி சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு (கோகோமி) ஆலோசனைக் குழு உறுப்பினரும் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான சோமோரேந்திர தோக்சோம் கூறுகையில், “பிரேன் சிங் ராஜினாமா செய்த பிறகு திறமையான ஒருவரிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும். மணிப்பூர் எம்எல்ஏக்கள் தங்களின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அனுமதித்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவர் ஆட்சி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் மாநில பாஜக தலைவர் சாரதா தேவி கூறுகையில், “மணிப்பூரின் ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு பிரேன் சிங் ராஜினாமா செய்தார். மாநில சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளது. சிறிது காலத்துக்கு பிறகு இந்த முடக்கம் நீக்கப்பட வாய்ப்புள்ளது” என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “எங்களின் 20 மாத கோரிக்கை கடைசியாக நிறைவேறியுள்ளது. கடந்த 2023, மே 3-ம் தேதி முதல் 300-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு மற்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தை மணிப்பூர் கண்ட பிறகு இது நிகழ்ந்துள்ளது” என்றார்.