பிரப்சிம்ரன் சிங்குக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது: பஞ்சாப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி

0
68

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங்குக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று அந்த அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கொல்கத்தாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் மழையின் காரணமாக ரத்தானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

பிரியன்ஷ் ஆர்யா 69 ரன்களும் (35 பந்துகள், 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்), பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களும் (6 சிக்ஸர், 6 பவுண்டரி), கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்களும், ஜோஷ் இங்லிஷ் 11 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடத் தொடங்கியது. ஒரு ஓவர் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஆட்டம் முடிவு இல்லாத ஆட்டமாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதன்மூலம் பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 11 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 9 ஆட்டங்களில் பங்கேற்று 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

போட்டியின் முடிவில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி கூறியதாவது: இந்த ஆட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இந்த ஐபிஎல் சீசனில் தொடக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா, பிரப் சிம்ரன் சிங் ஆகிய 2 பேரும் அபாரமாக விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி அணி நிர்வாகத்தினரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதிக முதிர்ச்சியான ஆட்டத்தை பிரப்சிம்ரன் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

இன்றைய ஆட்டத்தில் 49 பந்துகளில் 83 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக வெள்ளைப் பந்தில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சில சீசன்களாகவே நான் அவரது ஆட்டத்தைப் பார்த்து வருகிறேன். இந்த சீசனில் அவரது ஆட்டத்தில் முதிர்ச்சி தெரிகிறது. தேசிய அணியில் அவர் இணைந்து விளையாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here