சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு

0
20

குளச்சல் அருகே பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குளச்சல் அருகே ரீத்தாபுரம் செந்தறையைச் சேர்ந்தவர் சிபு கிங்சிலின் போஸ்கோ (50). இவர், ரீத்தாபுரம் பேரூராட்சியில் குடிநீர் விநியோக பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் சிஜூ (17) சுங்கான்கடை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தார்.

இவர், கல்லூரி விடுமுறை நாள்களில் கேட்டரிங் வேலைக்குச் செல்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) நண்பர்களுடன் கேட்டரிங் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவரது நண்பரான ஆலஞ்சியைச் சேர்ந்த மேசாக் (22) இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். பின்னால் சிஜூ அமர்ந்திருந்தார். பாலப்பள்ளத்தில் இருந்து குளச்சல் நோக்கிச் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளச்சல்–களிமார் பாம்பூரி வாய்க்கால் பாலத்தின் பக்கச் சுவர் மீது மோதினர். இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு குளச்சல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மேசாக் சிகிச்சை பெற்று வருகிறார். சிஜூ தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிஜூ, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here