உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறிய புனே இனிப்பு கடை மீதான எங்கள் நடவடிக்கை சரியானதுதான் என்று மகாராஷ்டிர உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய உணவு பாதுகாப்பு ஆணையராக துக்காராம் முண்டே பொறுப்பேற்றபின், கடந்த ஜூன் மாதம் புனேவில் உள்ள குருநானக் டெய்ரி அண்ட் ஸ்வீட்ஸ் கடையில் சோதனை நடத்தப்பட்டு, அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், உணவு பாதுகாப்புத் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவுபிறப்பித்தது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே கூறியதாவது: புனே இனிப்பு கடை தொடர்பான வழக்கில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு ஆச்சரியமளிப்பதாக உள்ளது. நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் அதை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
அந்தக் கடையில் இருந்து வாங்கிய உணவுப் பொருட்களை உட்கொண்ட பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொது சுகாதார நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாங்கள் எடுத்த நடவடிக்கை சரியானதே. அதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.















