பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கனவான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தங்களது தலைமையிலான அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.
அதேபோல், 2010 ஆக.23-ம் தேதிக்கு முன்னதாக பதவியேற்ற ஆசிரியர்களுக்கு, டெட் தேர்வில் இருந்து விலக்களிப்பது, இடைநிலை, முதுகலை, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது, ஊதிய முரண்பாடுகளை களைவது, கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணிமேம்பாடு, ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்குவது ஆகிய கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
மேலும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவும் முன்வரவேண்டும்.
அதேபோல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இதுதவிர, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க மறுக்கப்பட்ட 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்குவதுடன், 2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணிக்காலத்தை பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கவும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.















