ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

0
562

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகளை அந்த மாநில அரசு கட்டியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்ட இன்று (பிப்.26) முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்ட உள்ளார். இது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் நேற்று குப்பத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ரெட்டி குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்.26-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.

அதில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தடுப்பணைக்கான பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

இத்தகவல் தமிழக விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிஉள்ளது. ஏற்கெனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகப் பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய தடுப்பணை பணிக்குதமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘1992 பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு மீண்டும் மீறியுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவகாரம் குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ளது. இதுதவிர பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் இந்த வழக்குகள் முடிந்துவிட்டதாகப் பொய்யான ஒரு தகவலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இனியும் தமிழக அரசு தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதற்கான ஆதாரங்களைத் திரட்டி புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் பாலாறு என்று ஒன்றுஇருந்ததற்கான சுவடே இல்லாமல் போகும் நிலை எதிர்காலத்தில் வரும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here