குமரி மாவட்டம் வியன்னூர் அம்புவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 52). கூலித்தொழிலாளியான இவர் சொந்த ஊரில் சரியாக வேலை கிடைக்காததால் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று நாகர்கோவில் பள்ளிவிளை ரெயில்வே நகர் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜன் மனைவி சாந்தி (52) கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.