நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது மொராக்கோ.
மெக்சிகோவில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இந்த சுற்றில் சம பலம் வாய்ந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான பலப்பரீட்சையாக இந்த ஆட்டம் பார்க்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.
இதில் மொராக்கோ அணி அட்டாக்கிங் பாணி ஆட்டத்தை ஆட, அதனை தடுத்து ஆடியது நெதர்லாந்து. முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி நிறைவடைந்தது. அதன் பின்னர் இரண்டாவது பாதியின் 72-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்காக கோல் பதிவு செய்தார் கோடி கேக்போ. அதன் மெல்லாம் 1-0 என நெதர்லாந்து முன்னிலை பெற்றது.
ஆட்டத்தை வென்று விடும் நோக்கத்தில் தடுப்பாட்டத்தில் தீவிரமாக இருந்தது நெதர்லாந்து. இருப்பினும் ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90+ 1-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் மொராக்கோவின் இஸ்ஸா. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.
இதன் பின்னர் கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. அதில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இந்த ஆட்டத்தில் மொத்தமாக 780 பாஸ்களை மேற்கொண்டது மொராக்கோ அணி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 3-2 என்ற கணக்கில் மொராக்கோ வென்றது. தற்போது ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கனடா உடன் அந்த அணி விளையாட உள்ளது.















