மார்த்தாண்டம் அருகே சிராயங்குழி பகுதி சேர்ந்தவர் செல்லையா (74). தொழிலாளி. இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில்: – எனக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து விட்டார்.
எனவே இது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தேன். இதனை விசாரித்த நீதிமன்றம் 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மார்த்தாண்டம் போலீசாருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.
இதை அடுத்து கடந்த 19 – 6 – 2019ல் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்ட கோப்புகளை காணவில்லை எனவும் போலீசார் கூறுகின்றனர். குற்றம் சுமத்தப்பட்ட நபர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இதற்கு இடையே போலீசார் கோப்புகள் காணவில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைக்க நினைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.