மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் லூர்தய்யா (61) மீனவர். இவரது மனைவி விஜயாராணி (53). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரே வீட்டில் வசித்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விஜயாராணி தனது மகன்களுடன் தனியாகவும், லூர்தய்யா தனியாகவும் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். நேற்று வெளியில் சென்ற விஜயாராணி தாமதமாக வீட்டுக்கு வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த லூர்தய்யா வீட்டுக்கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்தார். அப்போது அவர் மனைவியைத் தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கினாராம். இதில் காயமடைந்த விஜயாராணி குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் லூர்தய்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.