நாகர்கோவில்: கடல் வழி தீவிர வாதத்தை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் நேற்று சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.2008ல் மும்பையில் பாக்., தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக புகுந்து தாக்குதல் நடத்திய பின் கடல் வழி தீவிரவாதத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.நேற்று சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை கன்னியாகுமரி கடலில் நடைபெற்றது. தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இந்திய கடலோர காவல் படை, மீன்வளத்துறை, உள்ளூர் போலீசார் இணைந்து இந்த ஒத்திகை நடை பெற்றது.காலை 6:00 மணிக்கு படகுகளில் கடலுக்குள் சென்ற போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த படகுகளில் ஆய்வு நடத்தினர். அடையாளம் தெரியாத மற்றும் சந்தேகத்துக்குரிய படகுகள் தென்பட்டால் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.106 கி.மீ., துாரமுள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று (ஜூலை 24) இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது.















