வங்க கடலில் வலுபெறும் காற்​றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு

0
126

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற இருப்பதால், தமிழகத்தில் இன்றுமுதல் 13-ம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.

இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 12, 13-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 14-ம் தேதி ஒருசில இடங்களிலும், 15-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

12-ம் தேதி திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

13-ம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

வடதமிழக கடலோரப்பகுதிகளில் 11-ம் தேதியும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 12-ம் தேதியும், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 13-ம் தேதியும் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here