கொல்லங்கோடு அருகே குரியன்விளையில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பந்தல் நாழி சர்க்கரை பொங்கல் விழா நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். இவ்வருடம் 12-வது பஞ்ச பூத ஷட் விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் மற்றும் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா துவங்கியது. நேற்று அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமம், உஷபூஜை, தோற்றப்பாட்டு, மாலை தீப சிகா ஊர்வலம் நடந்தது.
பாறசாலை பொட்டக் குழி ஸ்ரீ மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கி செறுவார கோணம் வழியாக கோயில் வந்தடைந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நடந்த பண்பாட்டு மாநாட்டில் யாக நிர்வாக தலைவர் சூரியா நிர்மலன் தலைமை வகித்தார். இராமேஸ்வரம் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கிருஷ்ணகுமார வண்டாஜி யாகத்தை துவக்கி வைத்தார். சிதம்பரம் கோயில் ஆச்சாரியர் பிரம்மஸ்ரீ சங்கர நடராஜ தீட்சித் மகா மண்டலேசுவரர் சங்கர கிருஷ்ணானந்த சரஸ்வதி சுவாமிகள், கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ நாராயண ரவ், ஸ்ரீலஸ்ரீ சடை சுவாமிகள் யாக ஆச்சாரியர் செந்தில் காந்த ஒளி வேந்தன் யாக சாம்ராட், வெங்கடேச ஐயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.