அருமனை பகுதியை சேர்ந்தவர் செல்வின் இன்பராஜ் (72). ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அதிகாரி. இவரது மனைவி பிரேமாவதி (63). நேற்று காலை கணவன் மனைவியுமாக பைக்கில் ரப்பர் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது தனியார் கல்லூரி பஸ் ஒன்று மோதியதில் பஸ்ஸின் டயரில் சிக்கி பிரேமாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேமாவதியின் உடலை மருத்துவமனை கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூபாய் 6 ஆயிரம் வசூலித்துள்ளனர். மேலும் உடலை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்ல மருத்துவமனை ஊழியர் ஒருவர் வந்து 1500 ரூபாய் வேண்டும் என கூறியுள்ளார். வேறு வழி இல்லாமல் இன்பராஜ் அண்ணன் மகன் மூலம் மருத்துவமனை ஊழியருக்கு ரூ. 1500 ஜிபே அனுப்பியுள்ளார்.
இதனை உறுதி செய்த பிறகு அந்த ஊழியர் பிரேமாவதியின் சடலத்தை கொண்டு செல்ல அனுமதித்தார். இதற்கிடையே ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சப் பணம் அனுப்பியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிறக்கம் செய்து, அதை சமூக ஆர்வலர் ஒருவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் அந்த ஊழியர் இடம் கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் கெஞ்சிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.