கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் மூல கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் பத்தாம் நாள் பத்தாமுதய பொங்காலை நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட பொங்கல் நேற்று காலை வழக்கமான பூஜைகள் முடிந்து, பின்னர் பண்டார அடுப்பில் தேவஸ்தான தந்தரி ஈஸ்வரன் போற்றி தீ மூட்ட பக்தர்கள் தீவைத்து பொங்கல் வழிபாடு செய்து அம்மனை வழிபட்டனர்.
தமிழக கேரள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொங்கல் நடப்பதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக குமரி மேற்கு கடற்கரை சாலையில் கண்ணனாகம் சந்திப்பு முதல் பழைய உச்சக்கடை வரை கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.