கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான தராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: – இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இழப்பு இந்திய நாட்டிற்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. உலக தலைவர்கள் போற்றிய பொருளாதார மேதை. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தவர். ஊழல் அற்ற வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஆட்சி நடத்தும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்தியவர்.
தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர் அவருடைய பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த உரிமைகள், கொள்கைகள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி கோடிக்கணக்கானரை வறுமையிலிருந்து மீட்டவர்.
வாழ்நாள் முழுவதும் தனது செயல் திறன் மூலம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு இந்திய வரலாற்றின் என்றென்றும் நிலைத்திருக்கும். இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக காங்கிரஸ் பேரியக்க தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு கனத்த இதயத்தோடு எனது கண்ணீர் அஞ்சலிகள். என கூறியுள்ளார்.