மேல் மிடாலம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயதாஸ் மகன் ஆன்றோ (16) இவர் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் கீழ்குளம் அருகே உள்ள பரவை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே இனயம் பகுதியைச் சேர்ந்த முகமது ஆதில் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் 14 வயது சிறுவன் ஒருவரும் அமர்ந்திருந்தார். எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பைக்கில் இருந்த மூன்று பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து ஆன்றோ மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆன்றோ பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.