பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர். மேலும், போட்டி தொடங்கும் முன்பு தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செய்திருந்தது. மேலும், போட்டியின் முடிவில் பயன்படுத்தப்படும் பட்டாசு வெடிக்கும் கொண்டாட்டங்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சியர் லீடர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.