உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்தியா, 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியா அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், குங்கும் மோஹோர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் வெல்வதை இந்திய மகளிர் அணி உறுதி செய்தது.
நாளை (9-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி. அதேவேளையில் ஆடவர் ரீகர்வ் அணிகள் பிரிவு அரை இறுதியில் தருண் தீப் ராய், தீரஜ் பொம்பதேவரா, யாஷ்தீப் போகே ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 2-6 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. கலப்பு அணிகள் பிரிவு 2-வது சுற்றில் தீரஜ் பொம்பதேவரா, அங்கிதா பகத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 2-வது சுற்றில் பிரேசில் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.















