ஹிஜாப் அணிந்து வர தடை: வேலையை ராஜினாமா செய்த கொல்கத்தா கல்லூரி ஆசிரியை

0
72

கொல்கத்தாவில் உள்ள எல்ஜேடி சட்டக் கல்லூரியில் சுமார் மூன்று ஆண்டு காலம் பணியாற்றி வந்த சஞ்சிதா காதர் என்ற ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். பணியிடத்துக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

எல்ஜேடி சட்டக் கல்லூரி தனியார் கல்லூரியாகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றி வந்த சஞ்சிதா காதரிடம் மே 31-ம் தேதிக்கு பிறகு பணியிடத்துக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் சொல்லியதாக தெரிகிறது. அதையடுத்து ஜூன் 5-ம் தேதி தனது பணியை அவர் ராஜினாமா செய்தார்.

கல்லூரி நிர்வாகக் குழுவின் உத்தரவு தனது மத உணர்வுகளை புண்படுத்தியதாக சொல்லி அவர் தனது பணியை துறந்தார். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. மேலும், சஞ்சிதாவை தொடர்பு கொண்டு பணியிடத்தில் தலையை துணியால் மூடுவதற்கு தடை ஏதும் இல்லை என சொல்லியதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவருக்கு மின்னஞ்சல் ஒன்றை கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளது. அதனை அவரும் உறுதி செய்துள்ளார். “கல்லூரி நிர்வாகம் திங்கட்கிழமை அன்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பியது. இது குறித்த முடிவை நான் ஆலோசிக்க வேண்டி உள்ளது. ஆனால், செவ்வாய்க்கிழமை நான் பணிக்கு செல்லவில்லை” என அவர் தெரிவித்தார்.

அந்த மின்னஞ்சலில் ஆசிரியர்களின் டிரஸ் கோட் குறித்து சீரான இடைவெளியில் ரிவ்யூ செய்வோம். இருந்தாலும் வகுப்பு எடுக்கும் போது தலையில் துப்பட்டா அல்லது வேறேதேனும் துணியை அணிந்து கொள்ள தடை ஏதும் இல்லை என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.