தமிழ்நாட்டில் இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. தடைக்காலத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. இந்தத் தடை ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
தடைக்காலத்தில் தமிழக அளவில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் மீ்ன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும்.
இந்த இரண்டு மாதங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளைச் சீரமைக்க பயன்படுத்திக் கொள்வர். மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தவுடன் தமிழகத்தில் மீன்களின் விலையும் உயரத் தொடங்கும். அதே சமயம், பாரம்பரிய மீன்பிடிப் படகுகளான பாய்மரப் படகு, நாட்டுப் படகு மற்றும் கட்டுமரங்கள் வழக்கம் போல கடலுக்குச் செல்லும். மேலும் தமிழகத்தில் 1.90 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தலா ரூ. 8,000 வீதம் தடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.
இது குறித்து, ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ஜூன் மாதம் வழங்கப்படுகிறது. இதை விரைவில் வழங்க வேண்டும். இலங்கை சிறைகளில் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைதிகளாக உள்ளனர். மேலும் சிலர் அதிகளவில் அபராதத் தொகை விதிக்கப்பட்டு கைதிகளாக உள்ளனர். இந்த மீனவர்களை எல்லாம் விடுதலை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
, என தெரிவித்தனர்.