பொதுமக்களின் வசதிக்காக, வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைக்கும் நிறுவனங்களை பதிவு செய்யுமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வீடு, நிறுவனங்கள் போன்றவற்றில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மத்திய அரசு சூரியசக்தி இலவச மின்திட்டத்தின் கீழ் வீடுகளில் ஒரு கிலோ வாட் திறனில் சூரியசக்தி மேற்கூரைகள் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்குகிறது. அதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.18 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் காரணமாக பொதுமக்கள் சூரியசக்தி மின்உற்பத்தி செய்யும் மேற்கூரைகள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும், பலருக்கு எந்த நிறுவனம் மூலமாக, சூரியசக்தி கூரைகள் அமைப்பது என்பது தெரியவில்லை. அந்த நிறுவனங்கள் குறித்த விவரங்களும் கிடைப்பதில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சூரியசக்தி உற்பத்திக்கான கூரைகள் அமைத்து தரும் நிறுவனங்களுக்கு மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
மின்வாரியத்தின் இணையதளத்தில் அந்நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலமாக, வீடுகளில் சூரியசக்தி உற்பத்திக்கான மேற்கூரை அமைக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்கள் எளிதாக கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.