அரை இறுதிக்கு முன்னேறியது ஆஸி: சாம்பியன்ஸ் டிராபி

0
194

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 95 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 85 ரன்களும் அஸ்மதுல்லா ஓமர் ஸாய் 63 பந்துகளில், 5 சிக் ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 67 ரன்களும் விளாசினர்.

ஆஸ்திரேலிய அணி சார் பில் பென்டுவார்ஷுய்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 274 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேத்யூ ஷார்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்து இருந்தார்.

டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். மழை நின்ற பின்னர் ஆடுகளத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியிருந்தது. இதை அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கிடையே மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டதால் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான் (நிகர ரன் ரேட் -0.990) 3 புள்ளிகளுடன் உள்ளது. ‘பி’ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் கராச்சியில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து மோதுகின்றன. இங்கிலாந்து ஏற்கெனவே அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. 2.140 நிகர ரன் ரேட்டுடன் உள்ள தென் ஆப்பிரிக்கா ஏற்கெனவே 3 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையாமல் இருந்தாலே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி விடும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here