“இந்த பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” – பஷீர் சொல்லும் வெற்றி வாய்ப்புகள்

0
280

இங்கிலாந்து அணியின் உயரமான ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் தன் முதல் 5 விக்கெட் பவுலிங்கை தன் தாத்தாக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்திய அணி வெற்றி பெற மேலும் 152 ரன்கள் தேவை என்ற நிலையில் 10 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து வீழ்த்தினால்தான் வெற்றி. பிட்சில் பந்துகள் மிக மிக தாழ்வாக வருகின்றன. சில பந்துகள் எழும்புகின்றன, திரும்புகின்றன. ஆகவே இந்திய அணிக்குக் கடினம், நாங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்தப் பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஷோயப் பஷீர் தெரிவித்துள்ளார்.

ஷோயப் பஷீர் தொடர்ச்சியாக 31 ஓவர்களை வீசியதோடு மொத்தமாக 44 ஓவர்களில் 119 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆகாஷ் தீப் இவரது 5வது விக்கெட். ஆனால் இந்தியாவின் புதிய விக்கெட் கீப்ப்ர் துருவ் ஜுரெல் 149 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து டாப் ஸ்கோரராகத் திகழ்ந்தார். குல்தீப் யாதவையும் இவரையும் கூட்டணி அமைக்க விட்டதை எண்ணி இங்கிலாந்து நிச்சயம் வருத்தமுறும். இந்திய வெற்றிக்கும் இங்கிலாந்து தோல்விக்கும் இந்தக் கூட்டணிதான் ஒரு பெரிய கேடாகிப் போனது. இங்கிலாந்தின் முன்னிலையை வெறும் 46 ரன்களாக இவர்கள் குறுக்கி விட்டனர்.

பிறகு இங்கிலாந்தின் பேட்டிங் முதுகெலும்பை இந்திய ஸ்பின்னர்கள் காலி செய்தனர். அஸ்வின், குல்தீப் யாதவ் தங்களிடையே 9 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். இங்கிலாந்து 145 ரன்களுக்குச் சுருண்டது. பஷீர் நேற்று இந்திய 2வது இன்னிங்சில் ஒரு ஓவரையே வீசினார். இவரை இன்னும் கொஞ்சம் முன்னால் கொண்டு வந்திருக்கலாம். கடையில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளாமலே 40/0 என்று வைத்துள்ளனர். ஆகவே இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்கிலாந்து வெற்றி பெற அதிசயம் நிகழ வேண்டும், அல்லது இந்திய அணி சரிவு காண வேண்டும். இரண்டாவது சாத்தியம் மிகமிகக்குறைவே.

இந்நிலையில் ராஞ்சி டெஸ்ட் நிலைமை பற்றி பஷீர் கூறியதாவது: ஆம்! ஒன்றிரண்டு விக்கெட்டுகளை மாலையில் வீழ்த்தி விடவே விரும்பினோம். அதனால் இன்று எனக்கும் டாம் ஹார்ட்லிக்கும் நிறைய வேலை இருக்கிறது. 10 விக்கெட்டுகளை வீழ்த்திட 10 வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

சவால்கள் குறித்து நானும் டாம் ஹார்ட்லியும் உண்மையில் உற்சாகமாக இருக்கிறோம். அஸ்வினும், ஜடேஜாவும் இந்தப் பிட்சில் எப்படி வீசினார்கள் என்று பார்த்தோம் அவற்றிலிருந்து தன்னம்பிக்கை பெற்றுள்ளோம். நான் இளம் வயதில் இவர்கள் இருவரையும் வீசுவதைப் பார்த்து வளர்ந்தேன். இவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள். எனக்கும் ஹார்ட்லிக்கும் நாயகர்களாக எழுச்சி பெற வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இந்தப் பிட்சில் பந்து வீச உண்மையிலேயே உற்சாகமான நாளை எதிர் நோக்குகிறோம். பிட்ச் சீரழிந்து கொண்டிருக்கிறது. குட் லெந்தில் சில பந்துகள் தாழ்வாகவும் சில பந்துகள் எழும்புவதையும் பார்த்தோம். இது எங்களுக்கு நல்ல அறிகுறியாகப் படுகிறது. எனவே நாங்கள் உற்சாகமிழக்காமல் தன்னம்பிக்கையுடன் தான் இருக்கிறோம்.

நானும் டாம் ஹார்டிலியும் உயரமான ஸ்பின்னர்கள், பந்தை விடும் உயரம் இருவருக்குமே அலாதியானது. எங்களை ஸ்டோக்ஸும் , மெக்கல்லமும் காரணத்துடன் தான் அணியில் சேர்த்துள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியை தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற பாடுபடுவோம். இவ்வாறு கூறினர் ஷோயப் பஷீர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here