தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். முதல் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய அவர், அதன் பின்னர் அவசரமாக தாயகம் புறப்பட்டுச் சென்றார். குஜராத் அணி நிர்வாகம், ரபாடா சொந்த காரணங்களுக்காக தாய்நாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி தென் ஆப்பிரிக்க வீரர்கள் சங்கத்தின் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரபாடா அதில், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தனக்கு கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். இது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரபாடா கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 தொடரில் பங்கேற்றார். இதில் 21-ம் தேதி எம்ஐ கேப்டவுன், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்துக்கு பின்னர் ரபாடாவுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத விளையாட்டுக்கான தென்னாப்பிரிக்க நிறுவனம் (SAIDS) நடத்திய இந்த சோதனையில் ரபாடா தேர்ச்சி பெறத்தவறியுள்ளார்.
இந்த சோதனை முடிவு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகி உள்ளது. அப்போது ரபாடா ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடன் இருந்தார். அடுத்த நாள் (ஏப்ரல் 2) குஜராத் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் ரபாடா கலந்து கொள்ளாத நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி தாயகம் புறப்பட்டுச் சென்றார். இந்த விவகாரத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ரபாடாவுக்கு 3 மாதம் தடை விதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளின்படி ரபாடா போதைப்பொருள் தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டத்தில் பங்கேற்றார். இதில் 2 அமர்வுகளை ரபாடா நிறைவு செய்ததை தொடர்ந்து அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரபாடா கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தடை நீக்கப்பட்டுள்ளதால் ராபாடா உடனடியாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் அணி விளையாட உள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அநேகமாக ரபாடா களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரபாடா கலந்துகொள்வதில் எந்தவித சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.