போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.
மவுன அஞ்சலி: இதையடுத்து, இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், போப் பிரான்சிஸ் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் எம்எல்ஏ இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.