அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் நேற்று விடுத்த அறிக்கை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்துள்ளார்
. அதில், “எனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தின் பின்புறம் பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் இருவரையும் அச்சுறுத்தினார். பின்னர் அதே நபர் எனது நண்பரை தாக்கிவிட்டு என்னிடம் பாலியல் சீண்டலுக்கு முயன்றார்” என தெரிவித்துள்ளார்.
கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில் ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலைய காவல் குழுவினருடன் வழக்கை தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார் குழுவினருக்கும் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக நிர்வாகம் காவல் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உறுதி: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இந்த சம்பவத்தில் வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்’’ என தெரிவித்திருந்தார்.