பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி வளாகத்தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு பிளாசா மையத்தில் சர்வதேச பின்டெக் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த சூழலில் கடந்த திங்கள்கிழமை ஜியோ வேர்ல்டு பிளாசா வளாகத்துக்கு 24 வயது இளைஞர் ஒருவர் சென்றார். விழா நடைபெறும் மையத்தின் நுழைவு வாயிலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அந்த இளைஞர் தன்னை பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி என்று கூறினார். அதற்கு ஆதாரமாக அடையாள அட்டை ஒன்றையும் காண்பித்தார். அவரோடு 50 வயது மதிக்கத்தக்க ஒருநபரும் வந்திருந்தார். அந்த நபரிடம் கைத்துப்பாக்கி இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், இளைஞர் அளித்த அடையாள அட்டையை தீவிரமாக பரிசோதித்தனர். அந்த அடையாள அட்டை போலியானது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முதல்கட்ட விசாரணையில் பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறிய இளைஞரின் பெயர் ரோஹன் பிரேமல் பரிக் (24) என்பதும், அவருடன் வந்த நபர் திலீப் ராஜா குண்டே (49) என்பதும் தெரியவந்தது. திலீப் ராஜா வைத்திருந்த கைத்துப்பாக்கியை பரிசோதித்தபோது அதில் குண்டுகள் நிரப்பப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களோடு தொடர்புடைய 3-வது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது பிரேமல் பரிக் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது: பிஎஸ்சி கணிதத்தில் பிரேமல் பரிக் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு முதலே அவர் தனிப்பட்ட முறையில் பாதுகாவலரை நியமித்து இருக்கிறார். அந்த பாதுகாவலரிடம் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி உள்ளது.
அண்மையில் தருண் குமார் என்பவர் பிரேமலை அணுகினார். பிரதமர் அலுவலக அதிகாரிக்கான பணி ஆணையை அவரே வழங்கினார். மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தருண் குமாரே உத்தரவிட்டார். இதன்பேரிலேயே பிரேமல் பரிக், ஜியோ வோர்ல்டு பிளாசா மையத்துக்கு சென்றார். அவரது பாதுகாவலரும் உடன் சென்றார். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வாதத்துக்கு மும்பை போலீஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் 3 பேரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் அலுவலக அதிகாரிக்கான போலி அடையாள அட்டை எங்கு தயாரிக்கப்பட்டது? பிரதமர் மோடி பங்கேற்ற ஜியோ வேர்ல்டு பிளாசா வளாகத்துக்குள் பிரேமல் எவ்வாறு நுழைந்தார்? கைத்துப்பாக்கி வைத்திருந்த பாதுகாவலர் உள்ளே நுழைந்தது எப்படி? இவர்களது பின்னணியில் உள்ள கும்பல் யார்? பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததா என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.















