குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷம்சுதீன் முசாஜி கெடா வாலாவுக்கும் அவருடைய மனைவி பர்சானாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஷம்சுதீன், அவரது சகோதரர் இக்பால் கெடாவாலா மற்றும் இரு கூட்டாளிகளுடன் இணைந்து பர்சானாவைக் கொலை செய்துள்ளனர். அதற்குப் பிறகு பல ஆண்டுகளாக அந்தக் குடும்பத்தினர் குற்ற உணர்ச்சியாலும், கொல்லப்பட்ட பெண்ணின் நிழல் தங்களைத் துரத்துவதாக ஏற்பட்ட மாயை யாலும் கடும் பீதியில் இருந்துள்ளனர்.
அந்த ஆவியிடமிருந்து விடுபட அவர்கள் மாந்திரீகர்களை நாடியுள்ளனர். அந்த மாந்திரீகர்கள் சடங்குகள் செய்தபோது, 1992-ல் நடந்த இக்கொலை குறித்த விவரங்கள் கசிந்து, இறுதியில் அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸாரைச் சென்றடைந்துள்ளது.
இதையடுத்து, ஷம்சுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பர்சானாவை புதைத்த இடத்திலிருந்து அவருடைய எலும்புக்கூட்டை தோண்டி எடுத்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனையில் அது பர்சானாவின் எலும்புக்கூடு என தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஷம்சுதீன் முசாஜி கெடாவாலா (61) மற்றும் இக்பால் முசாஜி கெடாவாலா (63) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்துல் கரீம் யாகூப்ஜி ஜவராவாலா மற்றும் ஷாலியாபிபி சமுட்கான் பதான் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.















