ஆந்திராவில் சாலை விபத்து: பெங்களூருவை சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழப்பு

0
15

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த மோகன் தாஸ் (71), நாகராஜு ராவ் (61), குசுமா (61), ஜெயந்தி (59), பூஜா (33) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காரில் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பெங்களூரு – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பலமனேர் அருகே உள்ள கங்காவரம் மண்டலம் தண்டபல்லி கிராஸ் எனும் இடத்தில், அதிவேகமாக வந்த கார், சிமெண்ட் லோடுடன் கர்னூல் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு கங்காவரம் போலீஸார் விரைந்து சென்றனர். பின்னர், காரில் இருந்து 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பலமனேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து கங்காவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here