உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, உன்னதி ஹூடா, ரக்சிதா ஆகியோர் கால் இறுதி முந்தையச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான தன்வி சர்மா 15-12, 15-7 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தோனேசியாவின் ஓய் வினார்டோவை வென்றார்.
மற்றொரு போட்டியில் உன்னதி ஹூடா 15-8, 15-5 என்ற கணக்கில் 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அலிஸ் வாங்கை வீழ்த்தினார். பிறிதொரு போட்டியில் இந்தியாவின் ரக்சிதா 11-15, 15-5, 15-8 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை ஆலியா ஜக்காரியாவைத் தோற்கடித்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் மூவரும் கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஞான தத்து 11-15, 15-6, 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் சக நாட்டு வீரர் சூர்யாக்ஸ் ராவத்தை வென்று கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.