விடுமுறை நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு முன்பு நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ஒருவர் கோடை விடுமுறைக்குப் பிறகு மனுவை பட்டியலிடுமாறு நீதிபதி அமர்விடம் வலியுறுத்தினார்.
இதைக்கேட்டு கோபம் அடைந்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியதாவது: வழக்கறிஞர்கள் கோடை விடுமுறை நாட்களில் வேலை செய்ய விரும்புவதில்லை. ஆனால், வழக்குகள் தேங்குவதற்கு நீதித் துறைதான் காரணம் என்று பொத்தம் பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது.
முதல் ஐந்து நீதிபதிகள் விடுமுறை அமர்வில் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். ஆனால், வழக்கு நிலுவையில் உள்ளதற்கு நாங்கள்தான் காரணம் என்கின்றனர். உண்மையில் விடுமுறை நாளில் வேலை செய்ய விரும்பாத வழக்கறிஞர்கள்தான் அதற்கு காரணம். இவ்வாறு பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.