நாகர்கோவில் கோட்டார் கண்ணங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51), பெயிண்டர். இவருக்கு சகிலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். வெங்கடேசன் நேற்றுமுன்தினம் இரவு பறக்கை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்குச் சென்று மது அருந்தியதாக தெரிகிறது.
பின்னர் வெங்கடேசன் சிறிது தூரம் நடந்துசென்றபோது, திடீரென மயங்கி சாலையோரம் கிடந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாகச் சென்றவர்கள் இதுபற்றி வெங்கடேசனின் உறவினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே இதுபற்றித் தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்குக் கொண்டுசென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.