உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். அகவை 93-ஐ எட்டினாலும் இன்னமும் தமிழர் நலனுக்காக சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருப்பவர். நிகழ்ச்சி ஒன்றுக்காக திருப்பூர் வந்திருந்த அவரிடம், இலங்கையை சீனா ஆக்கிரமித்து வரும் பிரச்சினை, எல்லையில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள், உலகத் தமிழர்களின் இன்றைய நிலை உள்ளிட்டவை குறித்து பேசினோம்.
இன்றைய சூழலில் எத்தனை நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்?
இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் தமிழர்கள் தான் அதிகமான நாடுகளில் வாழ்கிறார்கள். இந்நாடுகளை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், ரப்பர், தேயிலை, காபி போன்ற பணப்பயிர்களை விளைவிக்க கிராமப்புற உழைப்பாளிகளையும், பட்டியலின மக்களையும் இங்கிருந்து கப்பல், கப்பலாக ஏற்றி இந்த நாடுகளில் குடியமர்த்தினர். அப்படித்தான் இன்றைக்கு உலகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
தமிழர்களின் உழைப்பால் தான் ஆங்கிலேயர்கள் தங்களை செல்வந்தர்கள் ஆக்கிக் கொண்டார்களா?
பர்மாவின் ஐராவதி சமவெளிப் பகுதியில் நெல் விளைவிக்க இங்கிருந்து 3 லட்சம் தமிழர்களை கொண்டு சென்றார்கள். அதில் சுமார் 2 லட்சம் பேர் காடுகளை திருத்தும்பணியில் ஈடுபட்டபோது, கொடிய மிருகங்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்கி உயிரிழந்தனர். மலேசியாவில் ரப்பர், தேயிலை தோட்டங்களுக்காக 5 லட்சம் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். தென்னாப்பிரிக்காவின் கரும்பு தோட்டங்களுக்கு தமிழர்கள் கூட்டம், கூட்டமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆகவே, நிச்சயமாக தமிழர்களின் அளவற்ற உழைப்பால்தான், ஆங்கிலேயர்கள் செல்வந்தர்களாக மாறினார்கள்.
ஐந்தாறு தலைமுறைக்கு முன்பு இங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் இன்றைக்கு அந்த நாடுகளில் உழைப்பாலும், கல்வியாலும் உயர்வு பெற்று அங்கே மக்களவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். சிங்கப்பூரில் 60 சதவீதத்துக்கு மேல் சீனர்களும், 25 சதவீதத்துக்கு மேல் மலேசியர்களும் வாழ்கின்றனர்.
ஆனால், 10 சதவீதம் மட்டுமே இருக்கும் தமிழர்கள் 2 முறை அந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்திருக்கிறார்கள். இப்போதும் அங்கு ஐந்தாறு தமிழர்கள் அமைச்சர்களாகவும், பலர் மக்களவை உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களின் உயர்வுக்கு இந்தியாவோ, தமிழ்நாடோ காரணம் அல்ல. ஒரு காலத்தில் அடிமைகளாக வைக்கப்பட்டு இருந்தவர்கள் இப்போது தங்களது சொந்த முயற்சியில் அந்தநாட்டை ஆட்சி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
தமிழர்களாக அவர்கள் இழந்தவை எவை?
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தாய்த்தமிழர்களுடனான உறவு முற்றிலும் அறுந்துபோய்விட்டது. இதனால், நம்முடைய மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, பழக்கவழக்கங்களை இழந்த நிலையில் அவர்கள் வாழ்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் தமிழர்களின் வீட்டுக்குள்ளும் ஆங்கிலம். வீட்டுக்கு வெளியிலும் ஆங்கிலம். இந்தநிலை மாற தாய்த்தமிழர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். தமிழக அரசு அமைத்துள்ள உலகத்தமிழ்ச்சங்கம், தமிழராய்ச்சி நிறுவனம் போன்றவை மூலம், வெளிநாடு வாழ்தமிழர்களுக்கு இவற்றையெல்லாம் கற்றுத்தர ஆசிரியர்கள் அனுப்பப்பட வேண்டும்.
அடிக்கடி தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு இங்கிருந்து கலைஞர்கள் தூதுக்குழுக்களாக அனுப்பப்பட வேண்டும். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் பிரிட்டிஷ்கினியா நாடு உள்ளது. அங்கு முதல் பிரதமராக செட்டி ஜெகன் என்பவர் பதவியேற்றார். அவர் தனது மூதாதையர்கள் தமிழர்கள் என்பதை அறிந்து, இங்கு வந்து காரைக்குடி பகுதியில் பூர்விகத்தை தேடிப் பார்த்தார். அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளிநாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், வள்ளலார் பாடலை ஆங்கிலத்தில் எழுதி வைத்துத்தான் பாடுகிறார்கள்.
போருக்கு பின் இலங்கை எப்படி இருக்கிறது?
போருக்கு பின்பு ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. உணவுப்பொருட்களின் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டதால் சிங்கள மக்களே கொதித்தெழுந்து போராடும் நிலைக்கு வந்துவிட்டனர்.
இலங்கையை சீனா முழுமையாக ஆக்கிரமித்துவிட்டதாகச் சொல்வது உண்மையா?
ஆம். சீனா அனைத்து வகையிலும் ஒரு வல்லரசு. பொருளாதார ரீதியிலும் சீனா வலிமையாக உள்ளது. இலங்கை ஒரு சிறிய நாடு. இலங்கையுடன் நட்புறவு கொண்டால், அந்த நாட்டின் சந்தையை கைப்பற்றலாம் என சீனா கணக்குப் போட்டது. அதனால் இலங்கைக்கு சீனா அள்ளி அள்ளித் தருகிறது. இலங்கையின் அம்பன் தோட்டா பகுதியில் சீனா பெரிய கடற்படை தளம் அமைத்துள்ளது. இந்துமகா சமுத்திர கடல் மார்க்கம், வணிகத்துக்கு மிகவும் முக்கியமானது. வணிக போக்குவரத்து அதிகம் நடப்பது இந்து மகாசமுத்திரத்தில் தான். இந்த வணிகப் போக்குவரத்து நடக்கும் முக்கிய இடத்தில் தான் சீனா தனது கடற்படை தளத்தை அமைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திரா, ராஜீவ் காலங்களில் இந்தியா எடுத்த ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?
திரிகோணமலையில் அமெரிக்கா கடற்படை தளம் அமைக்க ஜெயவர்த்தனே பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திராகாந்தி, இந்து மகா சமுத்திர கடலோர நாடுகளின் மாநாட்டை டெல்லியில் கூட்டினார். அதில், அமெரிக்கா, சோவியத் என எந்த வல்லரசுக்கும் ராணுவத்தளமோ, கடற்படைத்தளமோ அமைக்க அனுமதி தரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஜெயவர்த்தனேயும் கையெழுத்திட்டதால் அமெரிக்கா பின்வாங்கியது.
அதேசமயம், ஜெயவர்த்தனேயை பழிவாங்கும் நோக்கில் விடுதலைப்புலிகள் உட்பட 2 ஆயிரம் போராளிகளுக்கு இந்திரா காந்தி இந்திய ராணுவத்தில் ரகசிய ராணுவ பயிற்சி அளித்தார். அவர்களுக்கு பயிற்சியுடன் ஆயுதங்களையும் வழங்கி அனுப்பி வைத்தார். சிங்கள ராணுவத்தை இவர்கள் அடிக்க வேண்டும் என இந்திரா காந்தி விரும்பினார். இதனிடையே இந்திராகாந்தி இறந்துவிட்டார். ராஜீவ் காந்தி ஆயுதங்களை திரும்பப்பெற, இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிவைத்தார். விடுதலைப்புலிகளுக்கு செய்யும் உதவி, நாளை தமிழ்நாட்டுக்கும் ஆபத்தாக வரலாம் என தவறான தகவல் தரப்பட்டதே அதற்குக் காரணம்.
எல்லையில் நமக்கு அதிகம் தொல்லை கொடுப்பது யார்?
சீனா தான். ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவின் அழுத்தம் இருக்கும் வரை ஈழத்தமிழர்களை நாம் எதுவும் செய்ய முடியாது என நினைத்து சீனாவுடன் கைகோத்தார். அம்பன் தோட்டா துறைமுகம், கொழும்பு துறைமுகம், ரயில் பாதை மற்றும் சாலைகள் அமைப்பது என பல்லாயிரம் கோடிகளை இலங்கைக்கு தந்தது சீனா. அதனால் தான் இன்றைக்கு அங்கு சீனாவின் கை ஓங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவுக்கும் எல்லையோரத்தில் அபாயம் அதிகரித்துள்ளது.
நேரு காலத்தில் இலங்கை நம்முடைய நட்பு நாடு என்று நம்பினார். அதனால் வட இந்தியாவில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளை தென்னிந்தியாவுக்கு மாற்றினார். தென்னிந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இருக்கின்றன. இப்போது இலங்கையில் சீனா காலூன்றியிருப்பதன் மூலம், தென்னிந்தியாவில் இருக்கும் நம்முடைய ராணுவ அமைப்புகளுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை விட இது பேரபாயம் என்பதை டெல்லியில் இருப்பவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பிரதமர் மோடியின் சமீபத்திய இலங்கை பயணம்..?
கோடி, கோடியாக அள்ளித்தந்து, இலங்கையை நம்பக்கம் திருப்பிவிடலாம் என மோடி தப்புக்கணக்கு போடுகிறார். ஆனால், இலங்கையால் சீனா உடனான உறவை கைவிடவே முடியாது. அவ்வளவு கடனை சீனா அள்ளித்தந்துள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பில் சீனா வலுவாக காலூன்றி உள்ளது. சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை எல்லைக்கு அடிக்கடி வந்து செல்கிறது. இந்தியாவை சுற்றி உள்ள அனைத்து நாடுகளிலும் சீனாவின் ஆதிக்கம் உள்ளது. இதை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கதையாகவே இருக்கிறதே..?
தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாகவே இந்திய அரசு கருதவில்லை. அதைத் தெரிந்து கொண்டு இலங்கை கடற்படையினர் எடுத்த எடுப்பில் சுடுகிறார்கள்; சிறைபிடித்துச் செல்கிறார்கள். இதுவரை 800-க்கும் அதிகமானோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அந்நிய நாட்டு ராணுவம் சுட்டுக்கொல்கிறது என்றால், அதற்கு பதில் நடவடிக்கை இந்தியாவிடம் எதுவும் இல்லை.
இப்போது, ராணுவம் சுட்டால் தானே பிரச்சினை என்று சொல்லி கடற்கொள்ளையர்களை வைத்து தாக்குகிறார்கள். கச்சத்தீவை திரும்ப பெற்றாலும் மீனவர் பிரச்சினை தீராது. கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான வழியும் இல்லை. ஏனென்றால், சாஸ்திரி – சிறிமாவோ உடன்படிக்கையில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்புக்கொண்ட பிறகு திரும்ப எப்படி கேட்க முடியும்?
மத்திய, மாநில அரசுகளிடம் உலகத் தமிழர் பேரமைப்பு எதிர்பார்ப்பது என்ன?
உலக நாடுகளில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் கற்றுத்தர வேண்டும். இதை செய்ய வேண்டியது தாய்த்தமிழ் உறவுகளான நமது கடமை. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மாநில அரசின் கையில் அதிகாரம் இல்லை. இந்திய அரசு தான் இதனைச் செய்ய வேண்டும்.
உலக தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு நாளைக்கு சுமார் 2-3 மணி நேரத்தை ஒதுக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் பாடம் சொல்லித்தர வேண்டும். குறைந்தபட்சம் தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற நாடுகளிலாவது தமிழர்களை இந்தியத் தூதுவர்களாக நியமிக்க தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசும் திட்டங்களை தந்து வருகிறதுதானே?
1983-ம் ஆண்டுக்கு பிறகு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உலகெங்கும் சுமார் 15 லட்சம் பேர் வாழ்கிறார்கள். கனடா போன்ற நாடுகளில் 3 ஆண்டுகளில் குடியுரிமை கிடைக்கிறது. இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். பட்டம் பெறுகிறார்கள். ஆனால், அரசாங்க வேலைவாய்ப்பு இல்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.