தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ராஜ் (19) என்பவரும் படித்து வருகிறார். நேற்று மாலை இரண்டு பேரும் கல்லூரி முடித்து வீட்டிற்குப் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். தோட்டியோடு சந்திப்பை தாண்டிச் செல்லும்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்று இவர்கள் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு, களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதில் ரஞ்சித் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.














