மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் டி.ஃபார்ம் படித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் முதல் கருங்கல் அரசு மருத்துவமனையில் உள்ள பார்மசியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 13) பயிற்சிக்குச் சென்ற மாணவியைப் பார்க்க வந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி ஆஸ்பத்திரி பார்மசிஸ்ட் அறைக்குள் நுழைந்துள்ளார். பின்னர் மாணவியின் கையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியுள்ளார்.
இதனைப் பார்த்து தடுக்கச் சென்ற கருங்கல் அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் அஜய் என்பவரை அடிக்கச் சென்று அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து டாக்டர் அஜய் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் உதயமார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெயின் (23) என்பவர் மீது கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.














