ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு – முழு விவரம்

0
245

பெங்களூருவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில், போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகி நிகோல் சோசலே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் 4-ம் தேதி வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை கர்நாடக அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில் கப்பன் பூங்கா போலீஸார், ஆர்சிபி அணிக்கு வெற்றி விழா ஏற்பாடு செய்த ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில‌ கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இவ்வழக்கை விசாரிக்குமாறு சிஐடி போலீஸாருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று உத்தரவிட்டார்.

விமான நிலையத்தில் கைது: இதையடுத்து சிஐடி போலீஸ் துணை ஆணையர் அக்ஷய் தலைமையிலான போலீஸார் நேற்று பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்ல இருந்த ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிக்கோல் சோசலேவை கைது செய்தன‌ர். அப்போது அவர் மும்பைக்கு தப்பி செல்ல முயற்சித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்திய ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான‌ டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ, மார்க்கெட்டிங் நிர்வாகி கிரண், ஒருங்கிணைப்பு நிர்வாகி சுமந்த் ஆகியோர் பெங்களூருவில் உள்ள அவரவர் இல்லங்களில் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று மாலை, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த ரோலன் கோம்ஸ் (25) அளித்த புகாரின்பேரில் போலீஸார் ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில‌ கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் ஆகியவற்றின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

கைதுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு: கைதான ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிக்கோல் சோசலே தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரகுராம் பட் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கு வரும் 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அரசியல் செயலர் நீக்கம்: இதனிடையே, இந்த விவகாரத்தில் தவறாக வழிநடத்தியதாக முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here