மதம் மாற மனைவியும் அவரது குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தியதாக கூறி சத்தீஸ்கரில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
சத்தீஸ்கரின் அர்ஜுனி காவல் எல்லைக்குட்பட்ட பொட்டியாதி கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கில் சடலமாக காணப்பட்டார். அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் பதிவில் தன்னை மதம் மாறுமாறு தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி வருவதாக கூறியிருந்தார். மேலும் தற்கொலைக்கு முன் தனது மைத்துனருக்கு அனுப்பிய தகவலில், மதம் மாறும்படி தனது மனைவி, அவரது தாய் மற்றும் 2 சகோதரிகள் தன்னை துன்புறுத்தி வருவதால் மிகவும் சோர்வடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் ஆனது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞரின் மனைவி, அவரது பெற்றோர் மற்றும் ஒரு சகோதரியை கைது செய்தனர். மற்றொரு சகோதரியை தேடி வருகின்றனர்.