பழங்குடியினர் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காதது ஏன்? – தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0
490

தமிழகத்தில் பழங்குடியினர் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காதது ஏன் என்பது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மல்லிகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நானும், எனது கணவரும் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோம். எங்களின் சமூகத்தை உறுதி செய்வதற்காக, ரத்த வழி உறவுகளின் சாதிச் சான்றிதழை அதிகாரிகள் கேட்டனர். அதன்படி, எனது உறவினரின் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆனாலும், பரம்பரை அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முதல் தலைமுறை நபர்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி,எனக்கு சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் எனது குழந்தைகளின் கல்விச் சலுகை, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது குழந்தைகளுக்கு இந்து காட்டுநாயக்கன் என்று சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

குமாரி மாதிரி பட்டீல் வழக்கில், பழங்குடியினர் பிரிவுக்குபொது விதிகளை உருவாக்கவும், மாநிலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் 30 ஆண்டுகளாகியும் அதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படவில்லை. அது தொடர்பான நடவடிக்கை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது.

எனவே, தமிழக ஆதிதிராவிடநலத் துறைச் செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் உச்ச நீதிமன்றம், குமாரி மாதிரி பட்டீல் வழக்கில் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதன் தற்போதைய நிலை என்னஎன்பது குறித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here