தெற்கு மும்பையைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரின் (35), மகள்கள் ஆயிஷா (16) மற்றும் ஜைனப் (13) ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் நடந்த உறவினர்கள் சந்திப்புக்குப் பிறகு தர்பூசணி பழம் சாப்பிட்டனர். அதன் பிறகு அனைவருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே 4 பேரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வெளியான பூர்வாங்க அறிக்கையில், உணவு நச்சு காரணமாக அவர்களின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கோடை காலத்தில் தர்பூசணி அதிக அளவில் விற்பனையாகும் பழமாக இருந்தபோதிலும், ஆசியாவின் மிகப்பெரிய மொத்த விவசாய சந்தைகளில் ஒன்றான நவி மும்பை வேளாண் உற்பத்தி சந்தையில் (ஏபிஎம்சி) தற்போது அதன் தேவை திடீரென சரிந்துள்ளது.
ஒரு கிலோ தர்பூசணி ரூ.5 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்கப்படுவதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பதாகத் தெரிவிக்கின்றனர். பொதுவாக, இதன் மொத்த விற்பனை விலை ரூ.10 முதல் ரூ.35 ஆகவும், சில்லறை விற்பனை விலை ரூ.30 முதல் ரூ.100 வரையிலும் இருக்கும்.
ஆனால், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததால் அதை வாங்குவதை பொதுமக்கள் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது.















