திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு இந்திரா காந்தி பெயரையே சூட்ட வேண்டும் – செல்வப்பெருந்தகை

0
235

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில் ரூபாய் 25 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. நீண்டகாலமாக திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

புதிய பேருந்து நிலையத்தை அமைக்கிற போது பழைய பெயரையே சூட்டுவது தான் மரபாகும். அந்த மரபை மீறுகிற வகையில் வேறொரு பெயரை சூட்டுவது எவ்வகையிலும் நியாயமல்ல. கடலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

1980 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று எந்த இந்திரா காந்தியை வரவேற்று கருணாநிதி உரையாற்றினாரோ அதை பெருமைப்படுத்துகிற வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here